உடன்குடி, மே 25: சாலையோர மரங்களில் விளம்பர பலகை ஆணி வைத்து அடிப்பதை தடை செய்ய வேண்டுமென கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தூய்மையான காற்று, மழை வளத்துக்கு மரங்கள் பேருதவி பெருகின்றன. மழை குறையும்போது மரங்களின் அவசியம் குறித்து கூக்குரலிடுவதும், மரம் வளர்த்தல் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரமும் தீவிரமடையும். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மரம் வளர்ப்பு குறித்து பல்வேறு அமைப்பினர் விழிப்புணர்வு நடவடிக்கையிலும், மரக்கன்று நடுவதையும் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சாலையோர மரங்களில் விளம்பர பலகை மாட்டுவதற்காக ஆணி அடித்து அதன் ஆயுளை குறைக்கும் நடவடிக்கையிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் மரங்களில் விளம்பர பலகை அடிப்பதை தடை செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.
