பெரணமல்லூர், மே 23: பெரணமல்லூர் அருகே கடன் தொல்லையால் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த இமாபுரம் இமாகுர்ஆன் பகுதியை சேர்ந்தவர் சீனு(32). இவரது மனைவி விஜயலட்சுமி(27). மகள்கள் பிரியதர்ஷினி(12), திவ்யதர்ஷினி(10). மகன் ரித்திக் ரோஷன்(3). சீனு தனது மனைவி விஜயலட்சுமி பெயரில், தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ₹8 லட்சம் கடன் பெற்று, மினிலாரி ஒன்றை வாங்கினார். ஆனால், சீனு கடந்த 4 மாதமாக தவணை தொகையை செலுத்தவில்லையாம். கடந்த 20ம் தேதி அவரது வீட்டிற்கு வந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், தவணைத்தொகையை கட்டும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த சீனு குடும்பத்தினர் நேற்று முன்தினம், குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.