திண்டுக்கல், மே 21: பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் இன்று (மே 21) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளதாவது: மார்ச் மாதம் பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்களுக்கான விடைத்தாள் நகல், இன்று, காலை 10 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களின் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறு கூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள், இதே இணையதளத்தில் அதற்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் இரண்டு நகல்கள் மற்றும் அதற்கான கட்டணத்துடன் மே 21 பிற்பகல் 2 மணி முதல் மே 23ம் தேதி மாலை 5 மணி வரை உரிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.