பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட மாலைப்பட்டியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானம் உள்ளது. இங்கு பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட அடிகுழாய் செயல்பாடின்றி கிடக்கிறது. இதனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய செல்பவர்கள் தண்ணீர் குடத்தையும் சுமந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் வசதி இல்லாததால் இறந்தவர்களை அடக்கம் செய்து விட்டு கை, கால்களை சுத்தம் செய்ய முடியாமல் திரும்புகின்றனர். சீர்குலையும் சுகாதாரம் இதேபோல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி முழுவதும் பொது சுகாதாரம் சீர்குலைந்து வருகிறது. கிராமங்களில் முறையாக குப்பை கழிவுகளை அப்புறப்படுத்துவதில்லை. இதனால் குப்பைகள் சாலை முழுவதும் பரப்பி கிடக்கிறது. குறிப்பாக நாகல்வேனி நகரில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.