தொட்டியம், மே 15: தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலசமுத்திரம், தேனி நகரில் இருந்து குட்டை தூர்வாரும் பணிக்கு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். வேலை முடிந்து 5 மணி அளவில் திரும்பியபோது திருச்சி-நாமக்கல் சாலையில் தனியார் கல்லூரி அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்லதுரை என்பவர் கூறுகையில், மணியம்பட்டியில் நடைபெற்ற குட்டை தூர்வாரும் பணிக்கு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 43 பேர் லோடு ஆட்டோவில் மீண்டும் பாலசமுத்திரம் மற்றும் தேனி நகருக்கு திரும்பி உள்ளனர். லோடு ஆட்டோ டிரைவர் வாகனத்தை மிக வேகமாக ஓட்டி வந்ததால் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது என்றார்.