சாலையோரம் தூங்கிய தொழிலாளி வேன் மோதி பரிதாப சாவு

பாகூர், மே 14:  நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை வாணியர் தெருவை சேர்ந்தவர் செல்வம்(50). கூலி தொழிலாளியான இவருக்கு அமுதா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மடுகரை ஏரிக்கரை பகுதியில் உள்ள சாராயக்கடை அருகில் சாலையோரம் படுத்து தூங்கியுள்ளார். அப்போது சூரமங்கலம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் அவ்வழியாக மினி வேனை ஓட்டி வந்துள்ளார். அந்த வேன் எதிர்பாராத விதமாக சாலையோரம் தூங்கிய செல்வம் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த செல்வத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செல்வம் மனைவி அமுதா கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதேபோல மடுகரை வாணியர் தெருவை சேர்ந்த வேங்கடபதி மனைவி ஞானம்பாள் (60) சில தினங்களுக்கு முன்பு மடுகரை ஏரிக்கரை சாலையோரம் அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் ஞானாம்பாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: