புதுச்சேரி, மே 14: ரேஷன் அரிசி மாதிரி ஆய்வு முடிந்தும் அதன் சான்றிதழ் இதுவரை கிடைக்காததால் பொதுமக்களுக்கான ரேஷன் அரிசி விநியோகம் தாமதமாகி வருகிறது.புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் சிவப்பு அட்டைகளுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 10கி அரிசியும் மாதந்தோறும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனியாரிடம் இருந்து தரமான ஒற்றை அவியல் அரிசி பாப்ஸ்கோ மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.இந்தாண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க நிதி ஒதுக்கப்பட்டது. சிவப்பு அட்டைகளுக்கு கடைகளில் அரிசியும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசிக்கான பணத்தை வங்கி கணக்கில் செலுத்தவும் கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார். ஆனால் மக்களவை ேதர்தல் அறிவிக்கப்பட்டதால் அரிசி வழங்குவது தடைபட்டது. இதனால் தேர்தல் முடிந்தவுடன் அரிசி வழங்கப்படுமென கூறியிருந்தார். அதன்படி தேர்தல் ஆணையம் இலவச அரிசி வழங்க தடையில்லை என கூறியதையடுத்து அரிசி வழங்குவதற்கான நடவடிக்கையை புதுவை அரசு தீவிரப்படுத்தியது. கடந்த 7ம்தேதி காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இருந்து 5 லாரிகளில் 95 டன் அரிசி லோடு தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்திற்கு வந்தது. அந்த அரிசியை குடிமைபொருள் வழங்கல் துறை அதிகாரிகள் சோதனையிட்டு ஆய்வு செய்தனர். அதன் மாதிரிகள் கோரிமேடு ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.