கோவை, மே 10: கோவையில் நேற்று மாவட்ட கலெக்டர் ராசாமணி தலைமையில் வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து உதவி தேர்தல் அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ம் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23ம் தேதி எண்ணப்படுகிறது. கோவை மாவட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களவை தொகுதி, சூலூர் சட்டமன்ற தொகுதி வாக்குகள் எண்ணப்படுகிறது.
இந்த வாக்குகள் எண்ணப்படுவது குறித்து வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தலின் போது நியமிக்கப்பட்டுள்ள உதவி தேர்தல் அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ராசாமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கோவை மாநகர காவல் துணை கமிஷனர் பாலாஜி சரவணன், பொள்ளாச்சி தேர்தல் அதிகாரியும் மாவட்ட வருவாய் அலுவலருமான ராமதுரை முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.