ராமேஸ்வரம், மே. 9: ராமேஸ்வரம் கோயில் குளத்தில் நேற்று மழை வேண்டி சிறப்பு வருணஜப யாகம் நடைபெற்றது. தமிழகத்தில் எதிர்பார்த்த அளவிற்கு கடந்த ஆண்டு மழை பெய்யாததால் பல பகுதிகளில் மக்களின் குடிநீர் தேவையைக்கூட பூர்த்த செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ராமேஸ்வரம் தீவுப்பகுதியிலும் போதிய மழை பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டும் குறைந்துள்ளது. வீட்டு கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில் காவரி குடிநீர் மட்டுமே உள்ளூர் மக்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்நிலை தொடர்வதால் தண்ணீர் வறட்சியை போக்கிடவும், மழை பெய்ய வேண்டியும் தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு யாகம் நடத்திட தமிழக அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மழை வேண்டி வர்ணஜப யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.