ஊட்டி, மே 9: சுற்றுலாத்துறை மூலம் ஆண்டு தோறும் நடத்தப்படும் படகு போட்டி மற்றும் படகு அலங்காரப் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டி ஏரியில் படகு போட்டிகள் சுற்றுலா பயணிகளுக்காக நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், இம்முறை மக்களவை தேர்தல் முன்னிட்டு ரோஜா, காய்கறி, வாசனை திரவிய கண்காட்சி மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. ஆனால், தற்போது வாக்குப்பதிவு முடிந்த நிலையில், குறிப்பிடும் வகையில் எந்த ஒரு நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கான அறிவிப்புகள் இல்லை. இதனால், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.