சேத்துப்பட்டு தூயலூர்து அன்னை தேவலாய ஆண்டு பெருவிழா ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

சேத்துப்பட்டு, மே, 9: சேத்துப்பட்டு- போளூர் சாலையில் தூய லூர்து அன்னை கிறிஸ்தவ தேவாலயத்தின் 124வது ஆண்டு பெருவிழா கடந்த 30ம் தேதி ஆலய வளாகத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் நற்கருணை ஆராதனை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை சிறப்பு கூட்டு திருப்பலி ஆயர்கள் ஸ்டீபன், சின்னப்பா ஆகியோர் வழங்கினர். பின்னர், நேற்று மாலை ஜெபமாலை, திருப்பலி, மற்றும் தேர் பவனி நடந்தது. தொடர்ந்து, வேலூர் மறை மாவட்ட ஆயர் சவுந்தரராஜன் மலர்களாலும் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் நற்கருணையுடன் ஆசி வழங்கி போப் ஆண்டவர் தெரு, அரசமர தெரு, பாத்திமா தெரு வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டார்.

நிகழ்ச்சியின் முன்னதாக நேற்று அதிகாலை ஆயர் தலைமையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஜெபமாலை சொல்லியபடி சேத்துப்பட்டு- வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள மாதா மலைக்கு தவப்பயணம் மேற்கொண்டனர். இதையடுத்து, நேற்று மாலை மலர்களாலும் மின்சார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் தூய லூர்து அன்னை, குழந்தை ஏசு, புனித அந்தோனியார், புனித சூசையப்பர், புனிர் சம்மநேசு ஆகியோர் போளூர்- வந்தவாசி நெடுஞ்சாலையில் பவனி வந்தனர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: