கோவில்பட்டி, மே 9: கோவில்பட்டியில் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. 9வது நாள் திருவிழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு பக்தர்கள் தெற்கு நந்தவனத்தில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் கோயிலில் அம்பாளுக்கு பாலாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மாலை 5 மணிக்கு பெண்கள் மாவிளக்கு ஏந்தி மேளதாளம் முழங்க நகர்வலம் வருதலும், தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு வேண்டுதலும், பூச்சட்டிகள், 21 அக்னி சட்டி, 54 அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் செண்டா மற்றும் மேளதாளம் முழங்க நகர்வலம் வருதலும் நடந்தது.