அம்பை, மே 9: அம்பை அருகேயுள்ள கோவில்குளம் வேளார் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் பிரகாஷ் (22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சுரேஷ் ( 25), அவரது தம்பி நாகராஜ் (23) ஆகிய 3 பேரும் நேற்று ஒரே பைக்கில் பாபநாசத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்றனர். சிவந்திபுரம்- பாபநாசம் சாலையில் பாலம் வேலை நடந்து வருவதால் மாற்றுப் பாதையில் திரும்பி அகஸ்தியர்பட்டி வழியாக தென்காசி சாலை வழியாக ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பைக்கை பிரகாஷ் ஓட்டி வந்தார். அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது நிலை தடுமாறிய பைக் சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த அம்பை இன்ஸ்பெக்டர் மன்னவன், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.