காஞ்சிபுரம், மே 8: மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி மற்றும் அவைத்தலைவர் கருணாகரன், பொருளாளர் சங்கரன் ஆகியோர் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி பொன்னியிடம் அளித்த புகார் மனு: காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மதிமுக மாணவரணி துணை அமைப்பாளர் திருப்புலிவனத்தை சேர்ந்த சுரேஷ்குமார் உத்திரமேரூரில் தையல் கடை நடத்தி வருகிறார். கடந்த மே 4ம் தேதி திருப்புலிவனத்தில் உள்ள வீட்டில் சுரேஷ்குமார் குடும்பத்தினருடன் இருந்தபோது திருப்புலிவனத்தை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவிச்சந்திரன் மகன் பாலாஜி என்பவர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதை தடுக்க முயன்றபோது சுரேஷின் மனைவியையும் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ்குமாரை அப்பகுதி மக்கள் மீட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஐ.சி.யு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.