திருவண்ணாமலை, மே 7: திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் ஆய்வு நடத்தினார்.திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும், சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.அதையொட்டி, இரண்டு இடங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கண்காணிப்பும், கேமரா காட்சிகளை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் நேரடியாக பார்வையிடும் வசதியும் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களை நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’களின் பாதுகாப்பு அம்சங்களை பார்வையிட்டார்.