தேனி, மே 3: தேனி மாவட்டத்தில் கோடைகால உழவை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். இதனால் மண்ணின் வளம் மேம்படும் என தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்தார். தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜவஹரிபாய் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் 25ம் தேதி 31.9 மி.மீ. மழை பெய்துள்ளது. இம்மழையை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தை கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும். கோடை கால உழவு மேற்கொள்வதால் மண்ணின் வளமானது மேம்பட்டு பயிர் நன்கு வளரக்கூடிய சூழ்நிலை உருவாகும். மண்ணில் காற்றுப்பரிமாற்றம் அதிகரித்து விதையானது மண்ணில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் எடுத்துக்கொள்ளும். மேலும் மண்ணின் இறுக்கம் குறைந்து பயிரின் வேர்வளர்ச்சி அதிகரிக்கும். பல ஆண்டுகளாக நிலத்தின் அடியில் இருக்கும் அருகம்புல் மற்றும் கோரைப்புல் போன்ற களைகளின் கிழங்குள் கோடை கால உழவின்போது நிலத்திற்கு மேல் கொண்டுவரப்பட்டு அழிக்கப்படும்.