திருவண்ணாமலை, மே 1: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் குளங்களில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் தொடர்பாக, மாசுக் கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் நலப்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர். இயற்கை முறையில் தண்ணீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 4ம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தம், 5ம் பிரகாரத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தம் ஆகியவற்றில், கடந்த வாரம் ஆயிரக்கணக்கான மீன்கள் திடீரென செத்து மிதந்தன. அதனால், குளங்களில் துர்நாற்றம் வீசியது. எனவே, பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.பின்னர், இரண்டு குளங்களிலும் செத்து மிதந்த மீன்களை தீயணைப்பு வீரர்களின் உதவியுடன், கோயில் ஊழியர்கள் அகற்றினர். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எஸ்பி சிபிசக்கரவர்த்தி ஆகியோர், பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தனர்.மேலும், இரண்டு குளங்களிலும் இருந்த தண்ணீரை, சென்னை கிண்டியில் உள்ள ஆய்வு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பருவநிலை மாற்றம் காரணமாக தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், மீன்கள் செத்திருக்கலாம் என ஆய்வு அறிக்கையில் தற்போது தெரியவந்துள்ளது.