கலசபாக்கம், ஏப்.25: கலசபாக்கம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல், தண்டராம்பட்டு ஜோதிநகரில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள், பிடிஓவிடம் மனு அளித்தனர். கலசபாக்கம் அடுத்த கெங்கவரம், ஆதமங்கலம் வடக்கு காலனி, ராஜீவ்காந்தி நகர் ஆகிய பகுதிகளில், கடந்த சில மாதங்களாக, குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் பலதடவை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த கெங்கவரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விசிகவினர் நேற்று, போளூர்- மேல்சோழங்குப்பம் சாைல, ஆதமங்கலம் மெயின்ரோட்டில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போளூர் டிஎஸ்பி பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர்கள் மலர்(கடலாடி), சீனிவாசன்(கலசபாக்கம்), தாசில்தார் லலிதா, பிடிஓ சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.