ராமநாதபுரம், ஏப். 25: ஆடு அடிச்சாலை பராமரிப்பின்றி இருப்பதாக கூறி இறைச்சி கடைக்காரர்கள் புறக்கணிப்பதால் ஆடுகள் இறைச்சி கடைகளிலேயே வெட்டப்பட்டு வருகின்றன. நோய் வாய்ப்பட்ட ஆடுகளை வெட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் இறைச்சிக்கடை விற்பனையாளர்கள் ஆடுகளை வெட்டுவதற்கு முன்பாக ஆடு அடிச்சாலைக்கு கொண்டு வந்து மருத்துவரின் முன்னிலையில் காண்பிக்க வேண்டும். அதன்பின்னர் தான் ஆடுகளை வெட்ட வேண்டும். நோய் தாக்கிய ஆடுகளை அங்கு வெட்டுவதற்கு அனுமதி கிடையாது. வெட்டப்பட்ட ஆடுகளுக்கு நகராட்சியின் சீல் வைக்கப்படும். அதன்பின்னரே ஆடுகளை வெட்ட அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில் தற்போது சில கடைக்காரர்கள் தங்களது இடத்திலேயே ஆடுகளை வெட்டிக் கொள்கின்றனர். இதனால் இறந்துபோன, நோய்வாய்ப்பட்ட ஆடுகளையும் கலந்து இறைச்சி கடைக்காரர்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. நோய்வாய்ப்பட்ட ஆடுகளை பொதுமக்கள் சாப்பிடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.