பென்னாகரம், ஏப்.24: பென்னாகரம் அருகே, பெத்தனூர் கிராமத்திற்குள் புகுந்த 2 காட்டு யானைகள் வாழை தோட்டத்தை நாசப்படுத்தியது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை அருகே பெத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் டினு(50) விவசாயி. இவர் தனது தோட்டத்தில் வாழை மரங்களை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது தோட்டத்தில் புகுந்த 2 காட்டு யானைகள், வாழை மரங்களை முறித்து சேதப்படுத்திக் கொண்டிருந்தன. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீப்பந்தங்களை காட்டியும், பட்டாசு வெடித்தும் யானைகளை விரட்ட முயன்றனர். ஆனால் அதற்குள் 2 யானைகளும் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்களை முறித்து நாசப்படுத்தின. பின்னர் யானைகள் அங்கிருந்து அருகில் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு சென்று விட்டன.