சாத்தூர், ஏப். 24: சாத்தூரில் நிதி பற்றாக்குறையால் நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. சாத்தூர் பெருமாள் கோயில் தெருவில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. குறுகிய இடத்தில் அனைத்து பிரிவுகளும் செயல்படுவதால், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து சாத்தூர் நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று, சாத்தூர் மெஜூரா கோட்ஸ் காலனியில், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அனைத்து வசதிகளுடன் நகராட்சி அலுவலகத்திற்கு, புதிய கட்டிடம் கட்டுவதற்கு முடிவானது. இதற்காக தமிழக அரசிடம் இருந்து ரூ.2.70 கோடி நிதி பெறப்பட்டது. கட்டுமானப் பணிக்காக, டெண்டர் விடப்பட்டு கடந்த ஓராண்டாக பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்பத்தில் விறுவிறுவென தொடங்கிய பணி, தற்போது தொய்வடைந்துள்ளது.