விருதுநகர், ஏப். 24: விருதுநகர் மெயின்பஜார் வழியாக, இயக்கப்பட்ட பஸ் போக்குவரத்து கோவில் திருவிழாவிற்காக நிறுத்தப்பட்டது. நேற்று மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியதால், இடையூராக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. விருதுநகரில் மெயின்பஜார் தேசிய நெடுஞ்சாலையாக தற்போது வரை உள்ளது. இந்த பஜாரில் ஆக்கிரமிப்பு அதிகமானதால், தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் நகருக்கு வெளியே சாலை அமைத்தது. இதனால், நீண்ட தூர பஸ்கள் விருதுநகரை புறக்கணித்து செல்கின்றன. விருதுநகர் பயணிகளை ஏற்ற மறுக்கும் அவலநிலை தொடர்கிறது. இதனிடையே, நகரில் நடுவில் செல்லும் 60 அடி அகல தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளால் 30 அடிக்கும் குறைவாக உள்ளது. பஜார் இயங்கும் நேரத்தில் கடைகளுக்கு வரும் வாகனங்கள், தள்ளுவண்டிகளை நிறுத்துவதால், சாலையின் அகலம் 15 அடிக்கும் குறைவாக மாறுகிறது.