சாத்தூர், ஏப். 24: சாத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மேலும், மருத்துவமனை இருபிரிவாக இருப்பதால், நோயாளிகளும், மருத்துவர்களும் இங்கும், அங்கும் அலைகின்றனர். இதனை தவிர்க்க புதிய அரசு மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளையும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூரில் உள்ள பிரதான சாலையில் பழைய அரசு மருத்துவமனை மற்றும் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் புதிய அரசு மருத்துவமனையும் செயல்பட்டு வருகின்றன. பழைய அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு, பிரசவ வார்டு, எக்ஸ்ரே பிரிவு ஆகியவை உள்ளன. புதிய அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு, ரத்தப் பரிசோதனை நிலையம், பிரேத பரிசோதனை, அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. இரு மருத்துவமனைகளிலும், தினமும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.