காலாப்பட்டு, ஏப். 24: விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக ஆரோ கடற்கரை விளங்கி வருகிறது. சர்வதேச நகரமான ஆரோவில் அருகில் இந்த கடற்கரை அமைந்துள்ளதால் ஆரோவில்லில் வசிக்கும் ஏராளமான வெளிநாட்டினர் இங்கு சூரிய குளியல் எடுத்து வந்தனர்.மேலும் இப்பகுதி சுற்றுலா நகரமான புதுச்சேரியையொட்டி அமைந்திருப்பதா புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகளும் இங்கு அதிகளவில் வர தொடங்கியுள்ளனர். அதேபோல உள்ளூர் மக்களும் அதிகளவில் வர தொடங்கினர். இதனால் வெளிநாட்டினர் சூரிய குளியல் எடுக்கும் பழக்கம் நின்று போனது. அதேவேளை முன்பை விட தற்போது இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனிடையே சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கு குடிநீர் வசதியுடன் கூடிய சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. இதனிடையே இந்த விளையாட்டு பூங்கா போதிய பராமரிப்பின்றி சேதமடைந்தது. தொடர்ந்து இப்பகுதியில் கடல் அரிப்பு அதிகமானதால் விளையாட்டு பூங்கா அடித்து செல்லப்பட்டு விட்டது. இதனால் இங்கு குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.குடிநீர் வசதி இல்லாததால் தாகம் எடுக்கும்போது கடும் சிரமம் அடைகின்றனர். மேலும் இப்பகுதியில் கடலில் குளிப்பவர்கள் உடை மாற்ற இடம் எதுவும் இல்லை. இதனால் பல்வேறு வகைகளில் சங்கடப்பட வேண்டியுள்ளது.