திருவண்ணாமலை, ஏப்.24: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலான மழை பெய்தது. அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 74 மி.மீ மழை பதிவாகியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. பருவமழை கைவிட்டதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம், ஏரி மற்றும் குளங்களில் கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் நடத்தும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக நேற்றுமுன்தினம் இரவு திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் கோடை மழை பெய்து, மக்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. நேற்றுமுன்தினம் மாலை தொடங்கிய மழை, இரவிலும் நீடித்தது. இதனால் செங்கம், கலசபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து விழுந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 74 மி.மீ மழை பதிவாகியுள்ளது.