காரைக்குடி, ஏப்.23: காரைக்குடியில் அக்னி வெயிலுக்கு முன்னரே இளநீர் விலை உயர்ந்து வருகிறது. காரைக்குடியில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அக்னி வெயில் துவங்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. தற்போது கோடைக்கு இதமான தாகம் தணிக்கும் இளநீர், தர்பூசணி, பனை நுங்கு வெள்ளரிக்காய், போன்ற இயற்கையான உணவு பொருட்களையே மக்கள் பெரிதும் வாங்கி உண்கின்றனர். கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததாலும் கஜா புயலில் தெனைன மரங்கள், பனை மரங்களுக்கும் சரி வர நீர் பாய்ச்சாததாலும் தென்னை விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சிறிய அளவிலான இளநீர் 15 ரூபாய்க்கும் கொஞ்சம் பெரிய அளவிலான இள நீர் 20 ரூபாய்க்கும் விற்றது. தற்போது கோடை வெயில் ஆரம்பித்ததில் இருந்து சிறிய இளநீர் ரூ.30க்கும் கொஞ்சம் பெரிய இளநீர் 40க்கும் பொள்ளாச்சி போன்ற வெளியூர்களில் இருந்து வரும் இளநீர் 50 ரூபாய்க்கும் விற்கப்படுவதால் இளநீர் விரும்பிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.