சத்தியமங்கலம், ஏப். 22:பாசனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் உள்ள இரட்டைப்படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் கிளைவாய்க்கால் ஒற்றைப்படை மதகுகளுக்கும் புன்செய் பாசனத்தில் நிலக்கடலை, எள் மற்றும் சோளம் பயிரிடுவதற்காக முறை விட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. 6 சுற்றுகளாக தண்ணீர் திறக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால், 5 சுற்றுகளாக குறைக்கப்பட்டு நேற்று காலை கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.