திருப்பூர், ஏப்.22: திருப்பூர்- காலேஜ் ரோட்டில் சிறிய குன்று வடிவிலான கொங்கணகிரியில், பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத கந்தப்பெருமான் கோயில் உள்ளது. இக்கோயில் கொங்கு மண்டலத்தின் பழமுதிர் சோலை என்றழைக்கப்படும் இக்கோயில் மகா கும்பாபிேஷகம் இன்று(22ம் தேதி) நடக்கிறது. 64 அடி உயர ராஜ கோபுரம், புதுப்பிக்க சிற்பங்களுடன், மூலவர், கன்னி மூலை விநாயகர், வாயு மூலை பெருமாள், தேவியருடன் நவக்கிரகங்கள் உள்ளிட்ட சன்னதிகள் புதுப்பொலிவு படுத்தப்பட்டுள்ளது. கும்பாபிேஷகத்தையொட்டி, கடந்த 18ம் தேதி யாக சாலை பூஜைகள் துவங்கின. அன்று, மூஷிக வாகனனுக்கு முதல் யாக பூஜை நடந்தது. 19ம் தேதி முருகனுக்கு முதற்கால யாக பூஜைகளும், 20ம் தேதி காலையில் இரண்டாம் கால யாக பூஜை, மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தன. 21ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜையும், மாலையில் ஐங்கரன் தம்பிக்கு ஐந்தாம் கால யாக பூஜையும் நடந்தன. நேற்று இரவு 7 மணிக்கு மருந்து சாத்துதல், ஸ்தூபி ஸ்தாபனம், இரவு 8.30 மணிக்கு, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது.