பட்டிவீரன்பட்டி, ஏப். 21: பட்டிவீரன்பட்டியில் மாநில அளவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கூடைபந்தாட்ட போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணி சார்பில் விளையாட உள்ள மாணவிகளுக்கு பயிற்சி முகாம் நிறைவு விழா மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் 33வது மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் இம்மாதம் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இப்போட்டியில் பங்கேற்கவுள்ள திண்டுக்கல் மாவட்ட அணிக்கான தேர்வு கடந்த 6ம் தேதி திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் நடைபெற்றது. இத்தேர்வில் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. மெட்ரிக் பள்ளி மாணவிகளான பவுனாம்பிகை, எம்.பவித்ரா, ஆர்.எஸ்.பவித்ரா, ரக்சிதா, மதுமிதா, ஜனரஞ்சனி, சோனா, பிராப்தி மற்றும் திண்டுக்கல் விளையாட்டு விடுதி மாணவிகளான ஆர்த்தி, திவ்யா, முத்துமாரி, மாளவி ஆகிய 12 மாணவிகள் திண்டுக்கல் மாவட்ட அணி சார்பில் விளையாட தேர்வாகினர்.இந்த மாணவிகளுக்கான பயிற்சி முகாம் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. மெட்ரிக் பள்ளி மைதானத்தில் இம்மாதம் 8ம் தேதி தொடங்கி நேற்றுடன் 13 நாட்கள் பயிற்சி முகாம் நிறைவுபெற்றது.