திருவெறும்பூர், ஏப்.18: மாணவர்கள் தலைமை பண்பை வளர்ப்பதுடன் அப்துல்கலாம் போன்று சிறந்த தலைவர்களாக உருவெடுக்கவேண்டுமென திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரியின் ஆண்டு விழாவில் மும்பை ஐஐடி பேராசிரியர் தீபக்படக் கூறினார். திருவெறும்பூர் அருகேயுள்ள என்ஐடி கல்லூரி ஆண்டு விழா நடந்தது. விழாவில் என்ஐடி இயக்குனர் மினிஷாஜிதாமஸ் தலைமை வகித்து பேசுகையில், என்ஐஆர்எப் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் திருச்சி என்ஐடி 10வது இடம் பிடித்தது, சீமன்ஸ் உற்பத்தி மையத்தின் தொடக்கம், கல்லூரியின் ஐந்தாண்டு திட்டம், பல முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள், கையொப்பமிடுதல் போன்றவைகளை பட்டியலிட்டார். மேலும் சிங்கப்பூர் இந்தியா ஹேக்கத்தான் போட்டி 2018ல் மற்றும் பிற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டினார். பின்னர் கல்லூரி வென்ற ஸ்வச் விருது, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பசுமை விருது குறித்தும் விளக்கினார்.