கால்நடைகளுக்கு போதிய விலையில்லை

திருப்பூர், ஏப்.16: கோடை காலம் துவங்கியதால் தீவனப்பயிர்கள் பற்றாக்குறையால் திருப்பூர் தென்னம்பாளையம் மாட்டு சந்தையில் கால்நடைகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துளளனர்.  திருப்பூர்-பல்லடம் ரோடு தென்னம்பாளையம் தினசரி மொத்த காய்கறி சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை செயல்படுகிறது. வாரம் தோறும் திங்கட்கிழமை  சந்தை கூடுகிறது. திருப்பூர், பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி, காங்கேயம், சூலுார், சோமனுார், அன்னுார், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், கால்நடை வளர்ப்போர தங்களுடைய கால்நடைகளை விற்க தென்னம்பாளையம் கால்நடை சந்தைக்கு வருகின்றனர். வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனை வருகிறது.   ஒட்டன்சத்திரம், கேரளா, ஈரோடு, சேலம், கோவை, சென்னை, தூத்துக்குடி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், கால்நடை வளர்ப்போர் என 500 க்கு மேற்பட்டோர் வருகின்றனர். தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் காலை முதல் மாலை வரை சந்தையில் விற்பனைக்காக கால்நடைகள் நிறுத்தப்படுகிறது. கன்றுக்குட்டி முதல் வயதான கால்நடைகள் வரை பல மணி நேரமாக சந்தையில் கட்டப்பட்டுள்ளதால் தாகம் தாங்க முடியாமல் நாக்கை வெளியே தள்ளிக்கொண்டு மூச்சு எடுக்கிறது.  ஒரு கால்நடைகளுக்கு ரூ.50 வீதம் சுங்கம் வசூலிக்கின்றனர்.

 சுங்கம் வசூல் செய்யும் குத்தகைதாரர் ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய் மாநகராட்சி–்க்கு குத்தகை தொகை செலுத்துகின்றனர். ஆனால் தண்ணீர் வசதி யாரும் செய்து தருவதில்லை. கால்நடை சந்தையில் தண்ணீர் தொட்டி இல்லாததால் கால்நடைகள் தாகம் தாங்க முடியாமல் ஆங்காங்கே படுத்துக்கொண்டு அவதிப்படுகின்றன. கோடை காலம் துவங்கியதால் கால்நடைகளுக்கு தீவனப்பயிர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர் தொடர்ந்து  தீவனம் போட்டு வளர்க்க முடியாமல் திணறி வருகின்றனர்.  தென்னம்பாளையம் கால்நடை சந்தைக்கு நேற்று அதிகளவு கால்நடைகள் வந்தது. ஆனால் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் கால்நடை வளர்ப்போர் கவலையடைந்துள்ளனர். நேற்று நடந்த கால்நடை சந்தைக்கு ஆயிரத்து 500 க்கு மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு வந்தது. கன்றுக்குட்டி ரூ.4 ஆயிரத்துக்கும், பெரிய காரி மாடுகள் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்தனர். சந்தையில் சுமார் 1 கோடி ரூபாய்க்கு  கால்நடைகள் விற்பனையானது. கால்நடைகளின் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் நுாற்றுக்கு மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தொட்டிகளை வைக்க வேண்டுமென கால்நடை வளர்ப்போர், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: