பொள்ளாச்சி, ஏப்.11: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி வனத்திலிருந்து யானைகள் இடம்பெயர்ந்து தண்ணீரை தேடி ஆழியார் அணைப்பகுதிக்கு வருவது அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு வரும் பயணிகள் ஆங்காங்கே சுற்றித்திறியும் வனவிலங்குகளை பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர். இதில், கடந்த ஆண்டில் பெய்த தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, இந்த மாதம் துவக்கத்திலிருந்து மழையில்லாமல் போனது. இதனால், வனப்பகுதியில் உள்ள நீரோடை மற்றும் தடுப்பணைகளில் தண்ணீர் வற்றியது. இருப்பினும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பால் வனத்தில் வறட்சி ஏற்பட்டு, அடர்ந்த வனத்திலிருந்து யானை உள்ளிட்ட விலங்குகள் நீர் நிலைகளை தேடி இடம் பெயர்கிறது. இதில், ஆழியார் அருகே உள்ள நவமலை பகுதியிலிருந்து, ஆழியார் அணைநோக்கி யானைகள் கூட்டம் கூட்டமாக வருவது தொடர்ந்துள்ளது.