விருதுநகர், ஏப். 10: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் தேரோட்டம் நேற்று தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில், பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.7ம் தேதி பொங்கல், 8ம் தேதி அக்கினிச்சட்டி ஏந்துதல் நடைபெற்றது. நேற்று (ஏப். 9) மாலை தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் சட்டத்தேரில் ‘ஸ்ரீவிநாயகர்’ முன் செல்ல, சித்திரை தேரில் ‘ஸ்ரீபராசக்தி மாரியம்மன்’, ‘ஸ்ரீவெயிலுகந்தம்மன்’ அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேரின் வடம் பிடித்திழுத்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ‘ஆகோ’, ‘அய்யாகோ’ கோஷங்களுடன் இழுத்தனர். அம்மன்கோவில் திடலில் துவங்கி மெயின் பஜார், தெப்பக்குளம் வழியாக தெற்கு ரதவீதியில் கருப்பசாமி கோவில் அருகே தேர் நிலை நிறுத்தப்பட்டது.