பெரம்பலூர், ஏப். 9: பெரம்பலூர் மாவட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகளை மக்களவை தேர்தல் பொது பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தனர். மக்களவை தேர்தலையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் நடைமுறை குறித்த பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வளாகத்திலும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது. பயிற்சி வகுப்புகளை பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளரான மஞ்சுநாத் பஜன்ட்ரி, பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சாந்தா ஆய்வு செய்தனர். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 332 வாக்குச்சாவடி மையங்கள், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 652 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடி மையங்களை பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு 33 மண்டலமாகவும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு 30 மண்டலமாகவும் பிரிக்கப்பட்டு மண்டல அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.