செங்கல்பட்டு, ஏப்.9: காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து, மறைமலைநகர் நகராட்சி பகுதிகளில் செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பொத்தேரி, மறைமலைநகர், தைலாவரம், மல்ரோஜாபுரம், செங்குன்றம், திருக்கச்சூர், பேரமனூர், கட்டாங்கொளத்தூர், கூடலூர், கடம்பூர், கழிவந்தப்பட்டு உள்ளிட்ட 21 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசுகையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு பெற்ற செல்வத்தை காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் கொண்டுவரவேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி மலர ஒத்துழைப்பு நல்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் பொதுமக்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்றார். முன்னதாக, வழிநெடுகிலும் வேட்பாளர் செல்வத்துக்கு பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின்போது ஏராளமானோர் பைக்குகளில் அணிவகுத்து சென்றனர்.