பேரணாம்பட்டு அருகே சோகம் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி போலீசார் விசாரணை

பேரணாம்பட்டு, ஏப். 7: பேரணாம்பட்டு அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஏரிக்குத்தி அருந்ததி காலனி பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகன் புவனேஷ்(4). அதேப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தான். அதே பகுதியைச் சேர்ந்த இவர்களது உறவினர்களான சரஸ்வதி- சங்கர் தம்பதியின் மகன் மதிலேஷ் என்ற தீக்ஷித்(3). இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை புவனேஷ் மற்றும் தீக்ஷித் அருகே உள்ள அவர்களது உறவினர் சுரேஷ் என்பவரின் வீட்டிற்கு சென்று விளையாடினர். அப்போது அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவர்கள் 2 பேரும் தவறி விழுந்ததாக தெரிகிறது. இந்நிலையில் புவனேஷ் மற்றும் தீக்ஷித்தை காணாத பெற்றோர் தேடிய போது தண்ணீர் தொட்டியில் சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி கிடந்தது தெரியவந்தது.

உடனே இருவரையும் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குமரேசன் பேரணாம்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: