பட்டுக்கோட்டை பகுதியில் இருசக்கர வாகனங்களில் எடுத்து சென்ற ரூ.1.42 லட்சம் பறிமுதல்

பட்டுக்கோட்டை, ஏப். 4: பட்டுக்கோட்டை பகுதியில் உரிய ஆவணமின்றி 2 இருசக்கர  வாகனங்களில் எடுத்து சென்ற ரூ.1,42,140யை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை  அடுத்த கோட்டாகுடியில் பறக்கும் படை அதிகாரி கோவிந்தராஜன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஆண்டிக்காடு கிராமத்தை சேர்ந்த உதயகுமார்  என்பவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் ரூ.82,140 இருந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து உதயகுமார் ெகாண்டு வந்த ரூ.82,140யை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ரூ.60 ஆயிரம் பறிமுதல்: பட்டுக்கோட்டை  அடுத்த சூரப்பள்ளத்தில் பறக்கும் படை அதிகாரி கோவிந்தராஜன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஆம்பலாபட்டு தெற்கு கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்குமார்  என்பவரிடம் நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அவர் ரூ.60 ஆயிரம் எடுத்து சென்றார். ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து ரூ.60 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து 2 இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1,42,140யை பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்பிரகாசம் மூலம் ஆர்டிஓ பூங்கோதை முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சார் கருவூலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: