செட்டியபட்டி ஊராட்சியில் தடை: பிளாஸ்டிக் தாராளம் தடுக்கப்படுமா?

செம்பட்டி, ஏப். 4: செட்டியபட்டி ஊராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் நிலத்தடி நீராதாரம் பாதித்து வருவதாக பொதுமக்கள், விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். சின்னாளபட்டி அருகே செட்டியபட்டி ஊராட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக செட்டியபட்டியில் இருந்து நண்பர்கள்புரம் செல்லும் பாலம் அடியில் செல்லும் கால்வாயில் மலைபோல் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளன. சிறுமலையில் இருந்து மழை தண்ணீர் வரும் இக்கால்வாய் பிளாஸ்டிக் கழிவுகளால் சீரழிந்து வருகிறது.

இதுபோல் ரயில்வே பாலம் அடியில் செல்லும் கால்வாயில் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதில் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணுக்கு அடியிலே தங்கி விடுகின்றன. இதனால் நிலத்தடி நீராதாரம் பாதித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் ஊராட்சியில் கடந்த ஒருவார காலமாக தெருவிளக்கு எரியாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதுகுறித்து  புகார் செய்ய சென்றால் செட்டியபட்டி ஊராட்சி அலுவலகம் பூட்டிக்கிடப்பதாகவும், ஊராட்சி செயலர் செம்பட்டியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று விட்டார் என்ற தகவலே தொடர்ந்து கிடைக்கிறது.

இதனால் கிராமமக்கள் புகார் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். மேலும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேர்தல் பணிக்கு சென்று விட்டதால் ஊராட்சி நிர்வாகத்தை கண்காணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து செட்டியபட்டி ஊராட்சியில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: