அம்பை, மார்ச் 28: அம்பாசமுத்திரத்தில் போலீஸ் துணையுடன் அரசியல் கட்சிகளின் கொடிபீடங்கள் இடித்து அகற்றப்பட்டன. தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 18ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு வெளியான கடந்த 10ம்தேதி முதல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிகளை தேர்தல் ஆணையம், நீதிமன்றம் உத்தரவுபடி போலீசார் துணையுடன் அந்தந்தப் பகுதி ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். அந்தவகையில் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் பல்வேறு அரசியல் கட்சியினர் கொடி மற்றும் கொடி கம்பங்களை மட்டும் அகற்றி விட்டு பீடங்களை விட்டு சென்றனர். அதில் வரையப்பட்ட கட்சி சின்னங்கள் வெளியே தெரியும் படி மூடப்பட்டிருந்தன.