×

அரசு மருத்துவமனையில் கண்ட இடங்களில் நிறுத்தப்படும் டூவீலர்கள் ஆம்புலன்ஸ் செல்வதில் இடையூறு

ராமநாதபுரம், மார்ச் 26:  ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வார்டுகளுக்கு செல்லும் பகுதியில் டூவிலர்கள் நிறுத்தப்படுவதால், நோயாளிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ராமநாதபுரத்தில் மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனை உள்ளது. சுற்றுப்புற கிராம பகுதிகளிலிருந்து ஏராளமான நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழந்தைகள் வார்டு, பெண்கள் வார்டு செல்லும் பகுதியில் ஏராளமான டூவிலர்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து செய்திகள் வெளிவந்த நிலையில் அப்பகுதி நோ பார்க்கிங் என அறிவிக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அப்பகுதியில் நோ பார்க்கிங் போர்டு இருந்தும் பலர் தங்களது டூவிலர்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள், அவர்களை பார்க்க வரும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மருத்துவமனை வளாக பகுதியில் உரிய இடத்தில் வாகனங்களை நிறுத்த அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று நோயாளிகள் பலர் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து வாணி கிராமம் ஜலீல் கூறுகையில், மருத்துவமனை வளாகத்தில் நினைத்த இடங்களில் டூவீலர்களை பலர் நிறுத்தி வருகின்றனர். இதனால் அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ் செல்வதில் கூட தடை ஏற்படுகிறது. தற்போது குழந்தைகள் வார்டு பகுதிக்கு செல்லும் இடங்கள் அனைத்தும் டூவிலர்கள் நிறைந்து உள்ளன. மருத்துவமனை அதிகாரிகள் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : places ,government ,hospital ,
× RELATED ஊத்துக்கோட்டையில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு