புதுச்சேரி, மார்ச் 26: புதுவையில் தனியார் பஸ், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இருப்பினும் அதை கடத்திய மர்ம ஆசாமிகளை பிடிக்க கலால்துறை தீவிரம் காட்டி வருகிறது.
புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் இரவு- பகலாக தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் குருசுகுப்பம் பகுதியில் உள்ள பாழடைந்த குடோனில் சந்தேகப்படும்படியாக சிலர் சுற்றித் திரிவதாக முத்தியால்பேட்டை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிழக்கு எஸ்பி மாறன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது அந்த பாழடைந்த குடோனில் 168 மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அதை மறைத்து வைத்திருந்த நபர்கள் யார்? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.