செங்கம், மார்ச் 26: செங்கம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை நடத்திய சோதனையில் காரில் எடுத்துச்சென்ற ₹6.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடக்கிறது. இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக அமல்படுத்தியுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க இரவு பகலாக தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், அத்தனூர் கிராமத்தில் செங்கம் பறக்கும் படை தாசில்தார் காமராஜ் தலைமையில் அதிகாரிகள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து செங்கம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் ₹1.39 லட்சம் பணம் இருந்தது. ஆனால் அந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.