திருவில்லிபுத்தூர், மார்ச் 22: திருவில்லிபுத்தூர் மற்றும் மல்லாங்கிணறில் நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 5 மணியளவில் ஆண்டாள்-ரெங்கமன்னார் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஆண்டாள் கோயில் முன்பு உள்ள செப்பு தேர் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் ஆண்டாள்-ரெங்கமன்னாருக்கு செப்பு தேரில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் ‘கோவிந்தா கோபாலா’ கோஷம் விண்ணதிர, நிலையத்தில் இருந்து கிளம்பிய செப்பு தேர் நான்கு ரத வீதிகள் வழியாக ஆடி அசைந்து மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது. செப்பு தேரோட்ட நிகழ்ச்சியில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன், வேதபிரான்பட்டர் அனந்தராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.