புதுச்சேரி, மார்ச் 22: புதுவையில் நாடாளுமன்ற தேர்தலில் கண்ணனின் ஆதரவு யாருக்கு? என்பது குறித்து இன்னும் சில தினங்களில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். காங்கிரசில் ராஜ்யசபா எம்பியாக இருந்தவர் கண்ணன். காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட இவர், புமுகா உள்ளிட்ட தனிக் கட்சிகளை தொடங்கி புதுச்சேரி அரசியலில் முக்கிய இடம் பெற்றிருந்தார். அதன்பிறகு காங்கிரஸில் மீண்டும் இணைந்த கண்ணன், 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் போட்டியிட்டார். அதன்பிறகு ஜெயலலிதா மறைவுக்குபின் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்த கண்ணன், சில மாதங்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஆளுங்கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சியையும் கடுமையாக சாடிய அவர், புதிய கட்சி தொடங்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தில் அவரது வழக்கறிஞர்கள் மூலம் புதிய கட்சியை பதிவு செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியிருந்தாலும், தற்போது வரை கண்ணன் தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். காங்கிரசும், என்ஆர் காங்கிரசும் வேட்பாளர்களை அறிவித்தவுடன் தனது இறுதி முடிவை விரைவில் வெளியிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.