புதுச்சேரி, மார்ச் 22: புதுச்சேரி மக்களவை தொகுதி தேர்தலுடன், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் 18ம் தேதி இதற்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று, அகில இந்திய மக்கள் கழகம் சார்பில் கூடப்பாக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி அருணாசலம் என்பவர் புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன்பின், நேற்று முன்தினம் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. 3வது நாளான நேற்று பிற்பகலில் விழுப்புரம் மரகதபுரத்தை சேர்ந்த உலக இளைஞர்கள் நல்வாழ்வு கட்சி நிறுவன தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவர், டெபாசிட் பணம் ரூ.25 ஆயிரம் செலுத்தவில்லை. அவரிடம் இருந்து மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் பெற்றுக் கொண்டார்.