காலாப்பட்டு, மார்ச் 22: காலாப்பட்டு மாத்தூர் சாலையில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு வீதியுலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான காவடி எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலையில் பாலமுருக சாமிக்கு சிறப்பு அபிசேகங்கள் நடந்தது. 8 மணியளவில் பக்தர்கள் 101 காவடிகள் எடுக்கும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து செடல் உற்சவமும் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஜேசிபி இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், கிரேன், வேன், லாரி, பஸ், கார், ஆட்டோ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வாகனங்களை பாலமுருகன் கோயிலில் இருந்து அலகு குத்தி இழுத்து சென்றனர். இசிஆர் சாலை, பிள்ளையார் கோயில் தெரு, தேரோடும் வீதி வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தனர்.