செய்யாறு, மார்ச் 21: செய்யாறு அருகே கல்குவாரியில் வேலைக்கு சென்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது சாவில் சந்தேகம் உள்ளது என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா, சுருட்டல் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(43). இவரது தந்தை தனபால்(75). இவர் அதே கிராமத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 4 ஆண்டுகளாக இரவு நேர வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு தனபால் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், மறுநாள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. தந்தை மாயமானது குறித்து எங்கு விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து சங்கர், தனது தந்தையை காணவில்லை என தூசி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.