பழநி, மார்ச் 19: உணவுப்பொருட்களில் லவைகள் விபரங்கள் குறிப்புச்சீட்டு வைத்திருக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு அலுவலர் ராமமுர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.பழநி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரம் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 21ம் தேதி நடக்கிறது. ஆனால் தற்போதே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநி கோயிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களிடம் விற்பனை செய்வதற்காக அடிவார பகுதிகளில் ஏராளளான தற்காலிக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு விளையாட்டு பொருட்கள், சிப்ஸ், கற்கண்டு, பேரீட்சை, அல்வா போன்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சில கடைகளில் கலப்பட, தரமற்ற திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.உணவுப்பொருட்கள் விற்பனை செய்வது குறித்து பழநி உணவு பாதுகாப்பு அலுவலர் ராமமூர்த்தியிடம் கேட்டபோது கூறியதாவது,பக்தர்களுக்கு தரமான, பாதுகாப்பான, கலப்படமில்லாத, காலாவதியாகாத உணவு பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும். உணவுப்பொருட்களை கையாள்வோருக்கு தொற்றுநோய் எதுமில்லை என உடல்நலத்தகுதி சான்று கட்டாயம் பெற்றிருத்தல் வேண்டும். உணவுப்பொருட்களை தயாரிக்க பாதுகாக்கப்பட்ட குடிநீரையே பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட இயற்றை அல்லது செயற்கை நிறங்களை சரியான அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். காலவதியான எண்ணெய்கள், அனுமதிக்கப்படாத செயற்கை நிறங்களை பயன்படுத்த கூடாது. உணவுப்பொருட்களை தயாரிக்க பயன்படும் நெய், வனஸ்பதி மற்றும் எண்ணெய் வகைகளை வாடிக்கையாளர்கள் அறியும் வகையில் அறிவிப்பு பலகையில் தெரியப்படுத்த வேண்டும்.