திருவில்லிபுத்தூர், மார்ச் 12: அம்மன்கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விதவிதமான பொம்மைகளை திருவில்லிபுத்தூர் தம்பதி தயாரித்து வருகின்றனர். தமிழகத்தில் பங்குனி மாதம் ஊர்தோறும் மாரியம்மன், காளியம்மன் மற்றும் அம்மன் கோயில்களில் திருவிழா நடக்கும். விருதுநகர் மாவட்டத்திலும் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் விமரிசையாக நடக்கும். இந்த திருவிழாக்களில் நேர்த்திக்கடன் நிறைவேறும் பக்தர்கள் பொம்மைகளை வாங்கி நேர்த்திக் கடன் செலுத்துவர். இந்நிலையில், திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த தம்பதியினர் கோயில் நேர்த்திக்கடனுக்கு தேவையான குழந்தை பொம்மைகள், தொட்டில் பொம்மைகள், வீடு அமைப்பு போன்ற பொம்மைகளை தயாரித்து வருகின்றனர். இது குறித்து பொம்மை தயாரிக்கும் திருவில்லிபுத்தூர் மாதா நகரைச் சேர்ந்த சின்ன ராமசாமி (52), அவரது மனைவி பேச்சியம்மாள் (50) ஆகியோர் கூறியதாவது: சுமார் 15 ஆண்டுகளாக நேர்த்திக் கடன் பொம்மைகளை தயாரித்துக் கொடுக்கிறோம். கோயில்களுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தும் பொம்மைகளை பொதுமக்கள் விரதமிருந்து மாசி மாதமே எங்களுக்கு ஆர்டர் கொடுப்பர். குழந்தை இல்லாதவர்கள் தவழும் குழந்தை பொம்மைகளையும், திருமண நேர்த்திக்கடனுக்கு ஜோடி பொம்மைகளையும், நான்கு வயது அல்லது 5 வயது குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால் பெரிய குழந்தை பொம்மைகளையும், தொட்டில் குழந்தை பொம்மைகளையும், வீடு கட்ட நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள் வீடு போன்றும் ஆர்டர் கொடுப்பர்.