நாமக்கல், மார்ச் 8: நாமக்கல் நகராட்சியில் மேலாளர், பொறியாளர், அக்கவுண்டன்ட் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் காலியாக இருப்பதால் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். நாமக்கல் நகராட்சியில், கடந்த 10 மாதமாக ஆணையாளர் பணியிடம் காலியாக இருந்தது. பொறியாளர் கமலநாதன், ஆணையாளர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், கடந்த இருவாரங்களுக்கு முன் நகராட்சி ஆணையாளராக சுதா நியமிக்கப்பட்டார். நகராட்சி பொறியாளர் கமலநாதன் பதவி உயர்வு பெற்று, சேலம் மண்டல நகராட்சி நிர்வாக பொறியாளராக கடந்த இரு நாட்களுக்கு முன் மாற்றப்பட்டார். இதனால், தற்போது பொறியாளர் பணியிடம் காலியாக இருக்கிறது. இதைத்தவிர, நகரமைப்பு அலுவலர் பணியிடம் கடந்த 7 மாதமாகவும், அக்கவுண்டன்ட் பணியிடம் ஓராண்டாகவும், சுகாதார ஆய்வாளர் பணியிடம் 2 ஆண்டுகளாகவும் காலியாக உள்ளது.